Friday, November 20, 2020

சோனி , சாம்சங் பெயரில் போலி எல்.இ.டிக்கள்... அதிர வைத்த எலக்ட்ரானிக் கடை!

சோனி , சாம்சங் பெயரில் போலி எல்.இ.டிக்கள்... திருச்சியை அதிர வைத்த எலக்ட்ரானிக் கடை!


சோனி, சாம்சங் போன்ற முன்னனி நிறுவனங்களின் பெயரில் போலி எல்இடி டிவி-க்கள் விற்பனை செய்த எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி பீமா நகர் பகுதியில் உள்ள சிட்டிபிளாசா வணிகவளாகத்தில் 'திருச்சி எலக்ட்ரானிக்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், தீபாவளி பண்டிகையையொட்டி முன்னனி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கடையில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவர் சோனி நிறுவனத்தின் 32 இன்ச் எல்இடி வாங்கியுள்ளார். வீட்டில் டி.வி. யை பொருத்திய சவுகத் அலி அதை ஆன் செய்ய முயன்றார். ஆனால், டி.வி. ஆன் ஆகவில்லை.

இதையடுத்து, சவுக்கத் அலி டி.வி. வாங்கிய கடைக்கு சென்று அதன் உரிமையாளர் நிஜாமுதீனிடம் புகார் அளித்தார். ஆனால், உரிமையாளர் நிஜாமுதீன் புகாரை கண்டுகொள்ளவே இல்லை. இதனால், சந்தேகமடைந்த சவுகத் அலி, சோனி சர்வீஸ் சென்டருக்கு சென்று தான் வாங்கிய புதிய டி.வியை பரிசோதித்தார். அப்போது, அந்த டி.வி. போலி என்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த சவுகத் அலி, இது தொடர்பாக பாலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவுசெய்த காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தியதில், அங்கிருந்த அனைத்து எல்இடி டிவிக்களும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடை உரிமையாளர் நிஜாமுதீன் போலியான பொருட்களையே வாடிக்கையாளர்களுக்கு இதுவரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து , கடை உரிமையாளர் நிஜாமுதீன், விற்பனையாளர்கள் முகம்மது பைசல், சரவணன் ஆகியோர்மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த போலீஸார் அவர்களை கைதுசெய்தனர். கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த முன்னனி நிறுவனங்களின் போலி 153டிவிக்களை பறிமுதல் செய்ய்ப்பபட்டது.

தீபாவளி பண்டிகைக்காக முன்னனி நிறுவனங்களின் டிவி மற்றும் வீட்டுஉபயோகப்பொருட்கள் தள்ளுபடி விலையில் வாங்கிய பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.