Sunday, December 30, 2018

மிதுன ராசி வருட ராசி பலன் 2019

அனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே


இந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். குருபகவான் 6-ம் இடத்தில் இருந்து மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார்  ஆனாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் குருபக
வான் மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அப்போது அவர் நன்மை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வாய்ப்பு, வசதிகள் பெருகும். பணியாளர்கள் உயர்வு பெறுவர்.


சனிபகவான் தற்போது 7-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இது சிறப்பானதல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில்  பிரச்னையை உருவாக்குவார். வீண்அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்க நேரிடும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம். ஆனால் இந்த பொதுபலன்களைக் கண்டு 

அஞ்ச வேண்டாம். சனிபகவான்  ஏப். 26 முதல்  செப்.13 வரை  வக்கிரம் அடைகிறார். இந்நிலையில் சனியால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில்  வக்ரத்தில் சிக்கும் போது கெடு பலன்கள் சற்று குறையும். மொத்தத்தில் சோதனை என்றாலும் வாழ்வில் சாதனையாளராகத் திகழ்வீர்கள். 


மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.

ஆண்டின் தொடக்கத்தில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.  முக்கிய விஷயங்களில் குடும்ப பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். குருபகவானின் 9-ம் இடத்துப்பார்வை மூலம் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அக்கம்பக்கத்தினர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். 

மார்ச் 13க்கு பிறகு பெண்களால் மேன்மை கிடைக்கும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  

கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். அதே நேரம் மே 19ல்  இருந்து அக்.26 வரை வீண்விவாதங்களை தவிர்க்கவும். கணவன்-, மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். 

குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. நவம்பர்,டிசம்பர் மாதங்களில் பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும்.


பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் பதவியையோ அல்லது தாங்கள் வகித்து வந்த பொறுப்பையோ விட்டுவிடும் நிலை ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். 


மார்ச் 13 முதல் மே 19 வரை  கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம். வேலையில் இருந்த தடைகள், திருப்தியின்மை  மறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக  செயல்படுவர். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். உங்களை பற்றி புரியாதவர்கள் கூட அனுசரணையாக நடந்து கொள்வர். உங்கள் திறமை பளிச்சிடும். 

சிலர் விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கப் பெறலாம். சம்பள உயர்வு கிடைக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்போருக்கு சிறப்பானதாக அமையும். மே 19 முதல் அக்டோபர் 26 வரை அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். அதன் பிறகு சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.  அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை பெறுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். 


வியாபாரிகள்  சொல்ல முடியாத அளவுக்கு சிரமம் சந்தித்திருக்கலாம். எதைத் தொட்டாலும் வளர்ச்சியை விட சறுக்கலே அதிகமாக இருந்திருக்கும். வெளியூர் பயணம் வீணாக போயிருக்கும். மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். 

நீங்கள் பட்ட கடனை திருப்பி செலுத்தலாம். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. உங்களுக்கு பகைவர்களாக இருந்தவர்கள் உங்களை உணர்ந்து உங்களிடம் சரணடைவர். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். காய்கறி, தானியம், பாத்திர வியாபாரம் நன்கு வளர்ச்சி அடையும். இரும்பு தொடர்பான வியாபாரத்தை செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. 

புதிய வியாபாரத்தை குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கலாம். 

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பது அரிது. மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை சிறப்பான நிலையில் இருப்பர். கடந்த சிலமாதங்களாக கிடைக்காமல் போன பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

அரசியல்வாதிகள்,  சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். 


மாணவர்களுக்கு இந்த ஆண்டு சுமாராகத் தான் இருக்கும். அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். தேர்வு முடிவுகள் பாதகமாக அமைய வாய்ப்பு இல்லை. குருவின் பார்வையால் வெற்றி கிடைக்கும். 

ஆனால் அடுத்த கல்வி ஆண்டு மிகவும் சிறப்பானதாக அமையும். 

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நஷ்டம் என்ற நிலை  இருக்காது. செலவு அதிகம் பிடிக்கும் பணப்பயிரை தவிர்க்கவும். மார்ச் 13ல் இருந்து மே 19வரை நெல், சோளம் கொள்ளு, பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். 

கைத்தொழில் செய்வோர் மனதில் நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக விட்டுக் கொடுத்து போகவும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை பிள்ளைகளால் பெருமை காண்பர். புத்தாடை, அணிகலன்கள், ஆடம்பர பொருள் அதிகம் வாங்குவீர்கள். வேலையில் இருக்கும் பெண்கள் மேன்மை அடைவர். ஆகஸ்ட், செப்டம்பர்  மாதங்களில் வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர்.


பரிகாரம்:


*  வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய் விளக்கு

*  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு 

*  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை


பாடுங்க! பாடுங்க


செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்து ஒளிரும்

எழில் மேனித் திருவே! வேலை

அங்கணுலகில் இருள் துரக்கும் அலர்

கதிராய் வெண்மதியாய் அமரர்க்கு ஊட்டும்

பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே

நெடுங்கானில் பொருப்பில் மண்ணில் 

எங்குளை நீ அவள் அன்றோ மல்லல்

வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா