Sunday, December 30, 2018

கன்னி ராசி வருட ராசி பலன் 2019

பெற்றோர் மீது அதிக பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே! 

உங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவர் உங்களை நல்வழியில் அழைத்து
செல்வார். உங்களுக்கு தற்போது 11-ம் இடத்தில் இருக்கும் ராகு  மூலம் காரிய அனுகூலம், பொருளாதார வளம் கிடைத்துக் கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறார். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பணஉதவி கிடைக்கும்.

குருவால் அவ்வப்போது தடைகள் குறுக்கிடலாம்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. இப்படி குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைகள் சிறப்பாக உள்ளன. எந்த இடையூறையும் அவரது பார்வை பலத்தால் உடைத்து எறிவீர்கள்.   2019 மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் குரு இருப்பதும் சிறப்பானது அல்ல. அவரால் மன உளைச்சல், உறவினர் வகையில் வீண்பகை உண்டாகும். 

சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் இருப்பது சிறப்பான இடம் என சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் சனி இருக்கும் போது  வீண் விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும். தாயைப் பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை  மூலம் நன்மையை எதிர்பார்க்கலாம். மேலும் சனிபகவான் ஏப்.26 முதல்  செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். அப்போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது.  

ஆண்டின் தொடக்கத்தில் பிற்பகுதியில் ராகுவால் நல்ல பொருளாதார வளம் பெருகும். தேவைகள் அனைத்தும் தடையின்றி கிடைக்கும். எடுத்த செயலைச் செய்து 
முடிக்கும் வல்லமை உண்டாகும். வாழ்வில் குறுக்கிடும் தடைளை சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். குருவின் பார்வையால் சிலருக்கு வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். மதிப்பு, மரியாதை சிறக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். மார்ச் 13க்கு பிறகு வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை குரு நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.  புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 13 முதல் மே 19 வரை சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். 
கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அண்டை வீட்டார் வகையில் வீண்பகை ஏற்படலாம். ஆண்டின் இறுதியில் குடும்பத்தில்  பிரச்னைகள் தலைதூக்கினாலும்  விட்டுக் கொடுக்கும் பக்குவத்தால்  சமாளித்து முன்னேறுவீர்கள்.

பணியாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் தன்னம் பிக்கையுடன் ஈடுபடுவர். வேலைப்பளு குறையும்.  குருவின் பார்வை பலத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் வரும். சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில்  வேலை கிடைக்கும். 
ஆனால் மார்ச் 13 முதல்  மே 19 வரை சிலருக்கு வேலையில் வெறுப்பு வரலாம். வேலையில் பணிச்சுமை கூடும். அதன்பின் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆனால் சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். 

மே 20-ந் தேதியில் இருந்து சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலையில் ஆர்வம் பிறக்கும். 
கோரிக்கைகள் நிறைவேறும். விருப்பமான இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். ஜுன்,ஜூலை மாதங்களில் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். 

வியாபாரம் சீரான வளர்ச்சி பெறும். ஆனால் உழைப்புக்கு ஏற்ப வருமானத்தை காணலாம். புதிய வியாபாரத்தை தொடங்குவதை விட இருப்பதைச் சிறப்பாக நடத்துவது நல்லது. கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும்.  நிர்வாகத்தில் திடீர் செலவு ஏற்படலாம். செலவில் சிக்கனம் பின்பற்றவும்.  மார்ச் 13க்குள் அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். கடன், வங்கி நிதியுதவி போன்றவை கிடைக்கப் பெறலாம். எதிரிகள் தொல்லை இருந்தாலும் சாதுர்யமுடன் சமாளிப்பீர்கள். அதன் பிறகு வியாபாரத்தில் அலைச்சலும், பளுவும் இருக்கத் தான் செய்யும். அரசு வகையில் உதவி கிடைப்பது அரிது. 

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது, பாராட்டு பெற வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் பணியில் மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவியும், பணமும் கிடைக்கும். 

மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு சிறப்பாக படிப்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். 

விவசாயிகள் நல்ல வளத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. நவீன இயந்திரங்கள் திட்டமிட்டபடி வாங்குவர்.  பிப்.13 வரை நெல், சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். அதன் பின் மானாவாரி பயிர்களில் ஓரளவு வருமானம் காணலாம்.     

பெண்களுக்கு பிள்ளை களால் வீண்செலவு ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வையால் தேவைகள் குறைவின்றி கிடைக்கும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. 
மார்ச்13க்கு பிறகு உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். மே19  முதல் அக்.26 வரை குடும்பவாழ்வில் குதூகலம் நிலவும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். ஜுன், ஜூலையில் ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உடல்நிலை திருப்தியளிக்கும். 

பரிகாரம்:

*  பவுர்ணமியன்று அம்பிகைக்கு நெய் விளக்கு
*  சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
*  வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு

பாடுங்க! பாடுங்க

சுரும்பு முரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப்
பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத்து என்னை எடுத்தாண்ட
அங்கயற் கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரணநுாபுரஞ்
சிலம்பும் அடிகள் போற்றி