Sunday, July 6, 2014

கர்ப்ப கால பிரச்சனைகள்

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு
ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்சனை மிகவும் சகஜம். இது 2வது, 3வது
மாதத்தில் தொடங்கி, 8வது மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (pregnancy gingivitis) என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான் இதுவும். கவனிக்கப்படா விட்டால், பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு இழப்புக்கு வித்திடும். 

அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். சில வேளைகளில் உணவுத்துகள்கள் அதன் அடியில் புகுந்து கொண்டு, வலியை ஏற்படுத்தும். பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத் தொடங்குமே தவிர, முற்றிலும் சரியாகாது. 

எனவே, பிரசவத்துக்குப் பிறகு, முழுமையான பல் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை இல்லை என்கிற பட்சத்தில், பிரசவமாகும் வரை அதைத் தள்ளிப் போடலாம். 

நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள், அவற்றின் அளவுகள் பற்றி பல் மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.  சில மருந்துகள், கருவிலுள்ள குழந்தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். 

கர்ப்பிணிகள் அடிக்கடி வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வாந்தி எடுப்பதால் உருவாகும் ஒருவித அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.