Wednesday, May 28, 2014

சரும பிரச்சனைக்கு ஒரே தீர்வு

வாழைப்பழம் என்றாலே அது மஞ்சள் பழத்தைதான் குறிக்கும். இது போக, பச்சை, மலை, கற்புரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்... என இதன் 
வகைகளோ ஏராளம். அது தரும் சருமப் பலன்களோ தாராளம்!

வயோதிகத்தைத் தள்ளி வைத்து, வாலிப அழகைக் கூட்டி, உடல் வனப்பை ஏற்படுத்தும்
வாழைப்பழத்தின் அழகு பலன்களை அறிந்து கொள்ளோம்.

* வெயிலின் உக்கிரத்தால் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது ‘வாழைப்பழ பேஸ்ட்’.

ஒரு வாழைப்பழத்துடன் சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.

இந்த வாழை – வெள்ளரிக் கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும். 

* வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவிவிடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.

* ஒரு சிறிய வாழைப்பழத்தைக் கூழாக்கி, இரண்டு டேபிள்ஸ்பூன் பாலேடு அல்லது ஏடு படிந்த கெட்டித் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் தேன். ஒரு டேபிள்ஸ்பூன் ஓட்ஸ்மாவு ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை வாரத்தில் மூன்று முறை குளிப்பதற்கு முன் முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து, காய்ந்ததும் குளிக்கவும், சருமத்தின் வறட்சி, சுருக்கங்கள் நீங்கி பொலிவு கூடும்.

* ஒரு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். அதன் பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின், ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்திலன் மெருகு கூடி பளபளப்பாகும்.

* கொத்து கொத்தாக முடி கையோட வருகிறதா? அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர்! 

கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைக்க, அடர்த்தி குறைந்து நீர்த்து விடும். அதனுடன் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், ஒரு எலுமிச்சப்பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு, 2 டீஸ்பூன் வெந்தயப் பவுடர், ரெண்டு டீஸ்பூன் புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் ‘பேக்’ போடவும். பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசவும். ஓரிரு வாரத்தில் முடி உதிர்வது தடைபடுவதுடன், நுனி பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்.