Sunday, February 28, 2016

திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது திட்டம்

திருப்பதி,:திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கு என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை துவங்கஉள்ளது.திருமலையில் திருமணம் செய்வதை பக்தர்கள் பாக்கியமாகக் கருதுகின்றனர். அதனால், தேவஸ்தானத்தின் சார்பில் திருமலையில், பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில், புரோகித சங்கம் ஏற்படுத்தி உள்ளது. 

இங்கு, திருமணம், காது குத்துதல் உள்ளிட்ட சுப காரியங்கள் நடந்து வருகின்றன. இத்துடன், திருமலையில் உள்ள அனைத்து மடங்களிலும் திருமணங்கள் நடந்து வருகின்றன. திருமலையில், 500 முதல், 10 லட்சம் ரூபாய் வரையிலான செலவில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. புரோகித சங்கத்தில் மட்டும், ஆண்டுதோறும், 5,000 திருமணங்கள் நடக்கின்றன.
ஆனால், இது குறித்து தகவல் அறியாத பக்தர்கள், திருமலையில் திருமணம் செய்ய இடைத்தரகர்களை நாடுகின்றனர். திருமணத்திற்கு தேவையான பொருட்கள், திருமண வீட்டார் தங்க வாடகை அறைகள், உணவு, தாம்பூலம், தரிசனம், என லட்சக்கணக்கில் திருமண வீட்டாரிடம், 
இடைத்தரகர்கள் வசூலித்து விடுகின்றனர். இது குறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது:திருமலையில், திருமணம் செய்ய புதிய திட்டம் துவங்கப்பட உள்ளது. இனி, திருமலையில் திருமணம் செய்ய விரும்புபவர்கள், இணையதளம் மூலம், வாடகை அறைகள், உணவு, திருமண பதிவு, லட்டு பிரசாதம் வாங்குவது உள்ளிட்ட அனைத்தையும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்யலாம். 
மேலும், திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும், தேவஸ்தானமே வழங்க ஆலோசனை நடந்து வருகிறது. அதனால், இனி பக்தர்கள் எளிதாக, வசதியாக, தங்கள் வீட்டு திருமணங்களை, இடைத்தரகர்களை நாடாமல் நடத்தலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.



என்னென்ன தேவை?

திருமலையில் திருமணம் செய்ய விரும்புபவர்கள், மணமகள், மணமகனின் பிறப்பு சான்றிதழ், இரண்டு ஆதார் அட்டை நகல், இரண்டு ரேஷன் கார்டு நகல், முகூர்த்த பத்திரிகையை இணைத்து, புரோகித சங்க அலுவலகத்தில் அளித்தால், அதை அவர்கள் பதிவு செய்து, திருமணம் செய்து கொள்ள அனுமதி 
வழங்குவர். இதற்கு கட்டணமாக தேவஸ்தானம், 500 ரூபாய் வசூலிக்கிறது. திருமணம் முடிந்தவுடன், திருமண பதிவு சான்றிதழையும், புரோகித சங்கத்தில் பெறலாம். 
அந்த சான்றிதழை காட்டினால், மணமக்கள், அவர்கள் பெற்றோர் என, ஆறு பேர் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க முடியும்.